×

என்சிஇஆர்டி 8ம் வகுப்பு புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் குறித்த புதிய பாடப்பிரிவால் சர்ச்சை: முக்கிய சவால்கள் குறித்தும் விளக்கம்

புதுடெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) 8ம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் பாட புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு முன் அதில் ‘நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு’ என்ற பாடத்தில், நீதித்துறையின் பங்கு, அதன் கட்டமைப்பு மற்றும் நீதி அணுகல் முறைகள் குறித்து மட்டுமே விளக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நீதித்துறையில் ஊழல், வழக்குகள் தேக்கம், நீதிபதிகளின் குறைவான எண்ணிக்கை ஆகிய நீதித்துறையின் சவால்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, நீதித்துறையில் ஊழல் குறித்த இந்த புதிய பகுதியில் நீதித்துறையின் பல்வேறு நிலைகளில் நிலவும் ஊழல், ஏழை மற்றும் சாதாரண மக்கள் நீதியை பெறுவதை மோசமாக்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், அதன் மீதான நம்பிக்கையை மேம்படுத்தவும் மாநில மற்றும் ஒன்றிய அளவில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இதற்காக தொழில்நுட்ப அம்சங்கள் பயன்படுத்தி, ஊழல் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதித்துறை மீதான புகார்களை பெற மத்திய பொது குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் கடந்த 2017 முதல் 2021 வரை 1600 புகார்கள் வந்துள்ளதாகவும் பாடத்தில் கூறப்பட்டுள்ளது.

நீதித்துறையில் நடத்தை மீறல்களும் ஊழல்களும் பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கக்கூடும் என்றும் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் ஜனநாயகத்தின் பண்புகள் என்றும் கடந்த ஆண்டு ஜூலையில் முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறிய கருத்தும் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. நீதித்துறை ஊழல் குறித்து பாடபுத்தகத்தில் புதிய பிரிவு சேர்க்கப்பட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

* வழக்குகள் தேக்கம்
வழக்குகள் தேக்கம், நீதிபதிகளின் குறைவான எண்ணிக்கை ஆகியவை நீதித்துறையின் முக்கிய சவால்கள் என்றும், உச்ச நீதிமன்றத்தில் சுமார் 81 ஆயிரம் வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 62.40 லட்சம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் 4.70 கோடி வழக்குகளும் தேங்கி இருப்பதாகவும் புதிய பாடப்பிரிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : NCERT ,New Delhi ,National Council of Educational Research and Training ,
× RELATED யுபிஎஸ்சி குடிமைப் பணித்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!