திருப்பூர், பிப். 20: திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டலம் வார்டு 16ல் பிச்சம்பாளையம் புதூர் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள மாநகராட்சி வரி வசூல் மையத்தையும், பழைய 2வது மண்டல அலுவலகத்தையும் ஒட்டி பொதுக்கிணறு உள்ளது. இதன் சுற்றுச்சுவருக்கு அடியில் மண்சரிவு ஏற்பட்டு சுரங்கம்போல் உள்ளது. இந்த மண் சரிவிற்கு மேல் பிறப்பு, இறப்பு பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
இதனை ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே மண் சரிவை சரி செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பொதுமக்கள் 2வது மண்டல அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். இதுபோல் 4வது வார்டு சமத்துவபுரத்தில் அமைந்துள்ள அரசு பள்ளிக்கு தென்புறத்து வீதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கடுமையான துர்நாற்றத்துடன் சாக்கடை வீதியில் வடிந்து வருகிறது. எனவே இதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
