மதுரை, பிப். 20: தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளரகளுக்கு யுஜிசி நிர்ணயித்தபடி ரூ.57 ஆயிரத்து 700 ஊதியம் வழங்க வேண்டும், 12 மாதங்களும் சம்பளம் வழங்கவேண்டும், ஓய்வு பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.25 லட்சம் பணிக் கொடை வழங்கவேண்டும், பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன்படி மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று 11வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வாணி ஜமுனா தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் ஷாலினி, சலோமி ஹேமசித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக மீனாட்சி அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் 150க்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். கல்லூரி வளாகத்தில் அமர்ந்து விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
