×

தமிழில் படித்தால் பிச்சை எடுக்க கூட உதாவது என்று கூறிவிட்டு தமிழகத்தில் ஓட்டு கேட்டு வருவோரிடம் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா காட்டம்

சென்னை: சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அசன் மவுலானா எம்எல்ஏ (காங்கிரஸ்) பேசியதாவது: நமது நாட்டில் 2 பேர் ஒன்றிய அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகின்றனர். பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி புத்தக்கத்தை தூக்கி காண்பித்தால் பேசவிடாமல் தடுக்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒரு புத்தக்கத்தை கொடுத்துள்ளார். இதுவும் இந்தியாவின் தலையெழுத்தை புரட்டக்கூடிய புத்தகமாக இருக்கும் என கருதுகிறேன்.

ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. குறிப்பாக கல்வி, மெட்ரோ, ஜல்ஜீவன் போன்ற திட்டங்களுக்கு வர வேண்டிய நிதிகள் வரவில்லை. இருப்பினும் முதல்வர் திறம்பட நல்லாட்சியை வழங்கி வருகிறார். மைனர் மினரல்ஸ், ஸ்டேட் மினரல்ஸ் போன்ற வியாபாரத்தை மாநில அரசு ஏற்று நடத்த வேண்டும். நகராட்சி துறையின் சிறப்பான செயல்பாடு காரணமாக துபாயில் மழை பெய்த போது அந்த நாட்டினர் நேரில் வந்து எனது தொகுதியான வேளச்சேரியை முன்னுதாரனமாக எடுத்துக்கொண்டு எப்படி இதுபோன்ற கட்டமைப்பை உருவாக்கி உள்ளீர்கள் என கேட்கும் அளவிற்கு வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகம்தான் மருத்துவம், கல்வி, முதலீட்டாளர் பாதுகாப்பு என அனைத்திலும் முதன்மை வகிக்கிறது, இதில் மாற்றுக்கருத்தில்லை. அதேபோல், பொருளாதார வளர்ச்சியில் 11.9 சதவீதத்துடன் மற்ற மாநிலங்களை காட்டிலும் வளர்ச்சியில் முன்னோடியாக உள்ளது. அமைதி பூங்காவான தமிழகத்தை சிதைக்க ஒரு கூட்டம் வந்துக்கொண்டு இருக்கிறது. தமிழ் படித்தால் பிச்சை எடுக்கக்கூட உதவாது என்று பாராளுமன்றத்தில் கூறிவிட்டு, இன்று தமிழ்நாட்டில் ஓட்டுக்கேட்க வந்துக்கொண்டு இருக்கிறது. இப்போது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Tamil Nadu ,Asan Maulana Kattam ,Chennai ,Legislative ,Assembly ,Asan Maulana ,MLA ,Congress ,Union Government ,Rahul Gandhi ,Chief Minister… ,
× RELATED போலீஸ் தடையில்லா சான்று பெறாத...