புதுடெல்லி: காஷ்மீரில் வாடிக்கையாளர்களிடம் கமிஷன் தருவதாக கூறி அவர்களின் வங்கி கணக்குகளை பணமோசடிக்கு பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுபோன்று மோசடியாளர்கள் பயன்படுத்தும் வங்கி கணக்குகள்(மியூல் கணக்குகள்) குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து காஷ்மீரில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளின் போது உலகளாவிய மோசடி வலையமைப்புகளின் நிதி முதுகெலும்பாக செயல்படும் வங்கி கணக்குகளை பாதுகாப்பு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,மூன்று வருட காலத்தில் காஷ்மீரில் செயல்பட்டு வந்த 8,000க்கும் மேற்பட்ட மியூல் கணக்குகள் அடையாளம் காணப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. இது பணமோசடியின் அதிநவீன வலையமைப்பை அம்பலப்படுத்தியுள்ளது.இந்த கணக்குகள் மூலம் அனுப்பப்படும் நிதி பிரிவினைவாத மற்றும் தேச விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என கருதப்படுவதால் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
