பெரம்பலூர், பிப். 13: பெரம்பலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை (14ஆம்தேதி) நடைபெறவுள்ளது என்று மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம்,
பெரம்பலூர் வட்டம், கவுல்பாளையம் கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாசுதேவன் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், பாண்டகப் பாடி கிராமத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல் தலைமையிலும், குன்னம் வட்டம், பெண்ணக்கோணம் (தெற்கு) கிராமத்தில் வருவாய் கோட்டாட்சியர் அனிதா தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், கொளக்கா நத்தம் கிராமத்தில்,
தனித் துணை ஆட்சியர்(ச.பா.தி) சிவக்கொழுந்து தலைமையிலும் நாளை 14 ஆம்தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு மாவட்டக் கலெக்டர் மிருணாளினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
