ஜெயங்கொண்டம், பிப்.13: ஆண்டிமடம் ஊராட்சியில் பராமரிப்பின்றி கிடந்த பூங்கா ஒரே நாளில் சீரமைக்கப்பட்டது. ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் தாய் திட்டத்தின் கீழ் கடந்த 2016-2017ம் ஆண்டு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா கட்டப்பட்டது. அந்த பூங்கா பராமரிப்பு இன்றி புதர் மண்டி கிடந்தது. இது குறித்து தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் செய்து வெளியிடப்பட்டது. மேலும், புதர் மண்டி கிடந்த பூங்காவில் இருந்த கேட் ஒன்றை தனி நபர் எடுத்து சென்றார்.
இந்நிலையில், தனிநபர் வசம் இருந்த கேட் மீண்டும் எடுத்து வரப்பட்டு பூங்கா சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கட்டிடத்தில் வயரிங் வேலை செய்து பூங்கா விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்சாமி தீவிர முயற்சியால் ஒரே நாளில் பூங்கா சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரை பாராட்டினர்.
