×

புளியம்பட்டி அந்தோனியார் ஆலய திருவிழா கோலாகலம்

நெல்லை, பிப். 11: புளியம்பட்டி அந்தோனியார் ஆலய பெருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலியில் கிறிஸ்தவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தென்னகத்து பதுவை எனப்போற்றப்படும் பாளை. மறை மாவட்டத்திற்குட்பட்ட புளியம்பட்டி புனித அந்தோனியார் ஆலய திருவிழா, தை மாதத்தில் 13 நாட்கள் நடைபெறும். இந்தாண்டிற்கான பெருவிழா, கடந்த ஜன.29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை திருப்பலி மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் நடந்து வந்தது. இதில் அம்பை, சங்கரன்கோவில், தென்காசி, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு மறை வட்டங்களைச் சேர்ந்த அருட்தந்தையர்கள் சிறப்பு திருப்பலிகள் நடத்தினர். நற்கருணை பவனி, கடந்த 8ம் தேதி நடந்தது.

சப்பர பவனி நேற்று முன்தினம் (9ம் தேதி) நடந்தது. அன்று மாலை நடந்த திருப்பலியில் பாளை. மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் பங்கேற்றார். விழாவின் சிகரமான பெருவிழா திருப்பலி நேற்று (10ம் தேதி) நடந்தது. இதில் முன்னாள் ஆயரும், மதுரை உயர் மாவட்ட பேராயர் அந்தோனி பாப்புசாமி பங்கேற்று திருப்பலியை நடத்தினார். இதில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெருந்திரளாகப் கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். அனைத்து ஏற்பாடுகளையும் திருத்தல அதிபர் மோட்சராஜன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். திருவிழாவை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Puliyampatti St. Anthony's Temple Festival ,Nellai ,Christians ,Puliyampatti St. Anthony's Temple ,Thai ,
× RELATED பூவாளூர் திருமூலர் நாதர் கோயிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு விழா