- கேரளா
- பாலக்காடு
- கேரள மாநிலம்
- பாலக்காடு டவுன் தெற்க
- அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- திருச்சூர் தேசிய மருத்துவமனை
பாலக்காடு: கேரளாவுக்கு லாரியில் தர்பூசணி பழங்களுக்கு இடையில் மறைத்து கடத்திய 4 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரள மாநிலம் பாலக்காடு- திருச்சூர் தேசியசாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே பாலக்காடு டவுன் சவுத் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு லாரியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். லாரியை டிரைவர் நிறுத்தாமல் சென்றார். சந்தேகமடைந்த போலீசார் லாரியை பின் தொடர்ந்து சென்று மடக்கி பிடித்தனர்.
லாரியை ஆய்வு செய்ததில் தர்பூசணி பழத்துக்கு அடியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 100 பெட்டிகளில் 4 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், 17 டெட்டனேட்டர்கள் மற்றும் திரிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இது குறித்து லாரி டிரைவரிடம் விசாரித்ததில் தர்மபுரியில் இருந்து திருச்சூருக்கு கடத்தி செல்வதாக தெரிவித்தார். இது தொடர்பாக தர்மபுரி மாவட்டம், பாப்பிரான்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமார் (47) என்பவரை கைது செய்த போலீசார் லாரி மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.
