×

மேற்கில் இருந்து தெற்கு புது ரூட் தேடும் தெர்மாகோல்: எல்லாமே காப்பி

மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மேற்கு தொகுதியையே நம்பி இருந்தாலும், இத்தொகுதியில் நாளுக்கு நாள் ஆளும் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்து வருவது தெர்மாகோல் விஞ்ஞானி செல்லூர் ராஜூவை அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது. கருத்து கணிப்புகளும் இம்முறை காலைவாறும் என்று கணக்கிட்டுச் சொல்வதால், கலங்கிப் போயிருக்கும் செல்லூர் ராஜூவின் கவனம் மெல்ல மதுரையின் தெற்குத் தொகுதிக்குச் சாய்ந்திருக்கிறது. ஏற்கனவே பாஜவினர் இத்தொகுதியில் தங்களுக்கான ஒரு சமூகத்து ஆதரவு ஓட்டு இருக்கிறதென மார்தட்டிக்கொண்டு தொகுதியை கூட்டணியில் உறுதி செய்து வரும் நிலையில், எப்பாடு பட்டாவது தெற்கு தொகுதியை கைப்பற்றி விடவேண்டும் என்று திட்டம் போட்டு இறங்கி அடிக்கிறாராம் செல்லூரார்.

எனவேதான், எடப்பாடி பழனிசாமி அறிவித்த தேர்தல் துண்டு பிரசுரங்களை விநியோகித்து, தேர்தல் பிரசாரம் துவக்கும் முதல் நிகழ்ச்சியை தெற்குத் தொகுதியிலேயே வைத்திட அழுத்தம் கொடுத்தாராம். முதல்நாள் மேற்குத்தொகுதியின் பெத்தானியபுரம் நிகழ்ச்சிக்கு பிறகு இந்த துண்டு பிரசுர விநியோகம் ஆரம்பித்தபோதும், அதிகாரப்பூர்வ முக்கிய நிகழ்ச்சியாக செல்லூர் ராஜூவின் விருப்பத்திற்கிணங்கவே சில தினங்களுக்கு முன் தெற்குத் தொகுதியின் முக்கிய இடமான மதுரை முனிச்சாலை சந்திப்பில் நிகழ்ச்சி ஏற்பாடானது.

கட்சி நிர்வாகிகளையெல்லாம் வரிசைகட்டி நிற்க வைத்து, அதிமுகவின் 5 தேர்தல் வாக்குறுதிகள் அச்சிட்ட துண்டு பிரசுரங்களை அவர்களுக்கு கொடுத்ததுடன், அருகாமை கடைகளுக்கும் போய் விநியோகித்து போட்டோவிற்கும் போஸ் கொடுத்தார். திடீர்னு இந்த தொகுதி மேல இவ்வளவு இன்ட்ரஸ்ட்டா என மூக்கில் விரல் வைத்த மூத்த நிர்வாகிகள், அச்சடிச்சுத் தந்திருக்கிற துண்டு பிரசுரத்தின் 5 வாக்குறுதிகளுமே ஆளும்கட்சி செய்து கொண்டிருப்பதை, காப்பியெடுத்து அறிவித்ததாக இருக்கே? இதைக் கொண்டு போயி வீட்டுக்கு வீடு எப்படித் தர்ரது? என்று புலம்பியபடியே கட்டுக்கட்டாகத் தந்த துண்டு பிரசுரங்களுடன் தங்கள் வீட்டிற்கே கிளம்பிச் சென்றதைக் காண முடிந்தது.

Tags : Thermocol ,AIADMK ,minister ,Sellur Raju ,Madurai district ,
× RELATED சொல்லிட்டாங்க…