வேலூர்: வேலூர் அருகே இன்று காலை அரசு பஸ் மீது கார் மோதியதில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். 3 குழந்தைகள் உள்பட 5பேர் படுகாயம் அடைந்தனர். வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து செதுவாலை நோக்கி இன்று காலை அரசு பஸ் சென்றது. காலை 9.30 மணியளவில் அப்துல்லாபுரம்-தெள்ளூர் கூரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்ற பஸ்சில் மாணவ, மாணவிகள் ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரியானா மாநில பதிவெண் கொண்ட கார், பஸ்சின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த காரில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் இருந்தனர். விபத்தில் ஒரு பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணின் சடலம் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்ததால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு பெண்ணின் சடலத்தை மீட்டனர். இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்தில் பலியான பெண் முகமதுஅசார் மனைவி ஷெரின்தாஜ்(28) என்பதும், படுகாயம் அடைந்த மற்றொரு பெண்ணின் பெயர் சினேத்தா(27) என்பதும் தெரிய வந்தது. காரில் இருந்த அனைவரும் பெங்களூருவை சேர்ந்தவர்கள் என்பதும், ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள உறவினர் இறந்துவிட்டதால், அவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று வந்துள்ளனர். இன்று அதிகாலை மீண்டும் பெங்களூருக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சென்னை-பெங்களூரு சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
