×

சொன்னபடி ஆள்பிடித்து வரவில்லை; செங்கோட்டையன் மீது விஜய் கடும் அதிருப்தி: பரபரப்பு தகவல்

திருச்சி: நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை துவக்கி விக்கிரவாண்டி, மதுரையில் மாநாடு நடத்தினார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை துவக்கினார். கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி பிரசாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் 2 முறை ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

தவெகவில் விஜய் மட்டுமே பிரபலமான நபர். மற்றவர்கள் மக்களிடம் அறிமுகமில்லாதவர்கள். எனவே தேர்தலை சந்திக்க மாற்றுக்கட்சிகளை சேர்ந்த பிரபலமானவர்கள் தேவை என்று விஜய் கருதினார். இதற்காக மாற்று கட்சியினரை இழுக்கும் படலம் தொடங்கியது. இதன்ஒரு பகுதியாக எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் அதிமுகவில் இருந்து விலகி கொங்கு மண்டலத்தை சேர்ந்த மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த நவ. 27ம் தேதி தவெகவில் இணைந்தார்.

இவர் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. எனவே இவரை பின் தொடர்ந்து, அதிமுகவில் உள்ள மேலும் பல 2ம் கட்ட தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. செங்கோட்டையனும் இதை உறுதிப்படுத்தி இருந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலர் என்னுடன் பேசி வருகிறார்கள். பொங்கலுக்குள் அவர்கள் தவெகவில் இணைவார்கள் என்று செங்கோட்டையன் கூறி இருந்தார். இதற்காக ஒரு பெரிய தொகையே செங்கோட்டையனிடம், விஜய் கொடுத்தாராம்.

ஆனால் செங்கோட்டையன் சொன்னபடி, அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் யாரும், இதுவரை தவெகவில் இணைய முன்வரவில்லை. இதனால் விஜய் செங்கோட்டையன் மீது அதிருப்தியில் இருக்கிறாராம்.  இதுகுறித்து தவெக வட்டாரத்தில் கூறியதாவது: தவெகவில் இணைந்தபோது சீனியர் என்கிற அடிப்படையில் செங்கோட்டையன் மீது விஜய் அதிக நம்பிக்கையில் இருந்தார்.

இவருக்கு தேவையான அனைத்தையும் விஜய் செய்து கொடுத்தார். இருப்பினும் அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகளை செங்கோட்டையனால் இழுத்து வர முடியவில்லை. இதுகுறித்து விஜய் கேட்கும்போதெல்லாம், அதிமுகவில் முக்கிய நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். விரைவில் வந்து விடுவார் என்ற பதிலை மட்டுமே செங்கோட்டையன் சொல்லி வந்தார்.

இதனால் செங்கோட்டையன் மீது நம்பிக்கை இழந்துள்ள விஜய், வேறு ஆட்கள் மூலம் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள தலைவர்களை இழுக்கும் படலத்தை தொடங்கியுள்ளார். மேலும் மாற்று கட்சிகளில் இருந்து வருவோருக்கு செல்வாக்கை பொறுத்து பணம் மற்றும் தேர்தலில் சீட் தரவும் விஜய் முடிவு செய்துள்ளார் என்றனர்.

* இதற்காக ஒரு பெரிய தொகையே செங்கோட்டையனிடம், விஜய் கொடுத்தாராம்.

Tags : Vijay ,Sengottaiyan ,
× RELATED “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அறிக்கை...