×

ஓட்டலில் மனித கறி கேட்டு தகராறு சமையல் மாஸ்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு

விருத்தாசலம், ஜன. 12: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள அருகேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் தினேஷ் (26). பெண்ணாடம் அருகே பெ.பொன்னேரியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு திடீர் குப்பத்தைச் சேர்ந்த 7 பேர்வந்துள்ளனர். அப்போது சாப்பிட என்ன வேண்டும் என்று ஊழியர்கள் கேட்டபோது எங்களுக்கு மனிதக் கறி வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் சமையல் மாஸ்டர் தமிழழகனிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தமிழழகன், அவர்களிடம் வந்து கேட்டபோது மனிதக் கறி தான் வேண்டும். சமைத்துக் கொடு என்று கூறியுள்ளனர். இதனால் தமிழழகனுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு 7 பேரும் சேர்ந்து தமிழழகனை சரமாரியாக தாக்கியதுடன் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் காயமடைந்த தமிழழகனை மற்ற ஊழியர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஓட்டல் உரிமையாளர் தினேஷ் பெண்ணாடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் திடீர் குப்பத்தைச் சேர்ந்த லோகநாதன் மகன் கவியரசன் (24), ரகுநாதன் மகன் பிரசாந்த் (19), சின்னத்தம்பி மகன் ஸ்ரீகாந்த் (22), மாவீரன் மகன் பிரகாஷ் (18), அதே பகுதியைச் சேர்ந்த பூமாலை, சூர்யா, பாரதி மற்றும் சிலர் என தெரிய வந்தது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட 7 பேர் மீதும் பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கவியரசன், பிரசாந்த், ஸ்ரீகாந்த் ஆகிய மூவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரகாஷ், சூர்யா, பாரதி, பூமாலை உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

 

 

Tags : Virthasalam ,Rajendran ,Dinesh ,Arugeri ,Vratashalam ,Bey ,Pennadam ,Bonneri ,
× RELATED கிரிவலம் சென்று திரும்பியபோது செஞ்சி...