தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர், சாயர்புரம் அருகே தோட்டத்தில் தமிழர் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் ஆண்டுதோறும் வெளிநாட்டினர் பங்கேற்கும் ‘ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச்’ என்ற ஆட்டோ சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த ஆண்டும் ஆட்டோவில் சுற்றுலா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 28ம் தேதி சென்னையில் சுற்றுலா பயணம் தொடங்கியது. இந்த பயணத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளை சேர்ந்த 13 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் என மொத்தம் 29 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் 29 பேரும் 11 அணிகளாக பிரிக்கப்பட்டு 11 ஆட்டோக்களில் தங்கள் பயணத்தை தொடங்கினர். அவர்களே ஆட்டோக்களை ஓட்டி வந்தனர். புதுச்சேரி, தஞ்சை, மதுரை வழியாக அவர்கள் நேற்று தூத்துக்குடி வந்து சேர்ந்தனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனைவரும் நேற்று மாலை தங்கள் ஆட்டோக்களில் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள தனியார் பண்ணைத் தோட்டத்துக்கு சென்று சேர்ந்தனர். அங்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். வெளிநாட்டினர் 11 பானைகளில் தனித்தனியாக பொங்கல் வைத்தனர். அவர்களுக்கு பொங்கல் பானை, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் கொடுக்கப்பட்டு, அவர்களே அடுப்பு மூட்டி தனித்தனியாக பொங்கல் வைத்தனர். ஆண்கள் அனைவரும் வேட்டி கட்டி, தோளில் துண்டு போட்டு இருந்தனர். அதுபோல பெண்கள் சேலை கட்டியபடி பொங்கல் வைத்தனர்.
பொங்கல் பானை பொங்கி வழிந்தபோது தோட்டத்து பணியாளர்கள் சொல்லி கொடுத்தபடி ‘பொங்கலோ, பொங்கல்’ என கோஷமிட்டதுடன், குலவை சப்தம் எழுப்பினர். பின்னர் தாங்கள் சமைத்த பொங்கலை உண்டு மகிழ்ந்தனர். இதில் சிறப்பாக பொங்கல் வைத்த குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெளிநாட்டினரின் ஆட்டம், பாட்டத்துடன் பண்ணை தோட்டம் களை கட்டியிருந்தது. தோட்டம் முழுவதும் கரும்பு, மஞ்சள் குலை, வாழை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
