தா.பழூர், ஜன.1: சுத்தமல்லி கிராமத்தில் விவசாயிகளுக்கு மீன் அமினோ அமிலத்தின் முக்கியத்துவம் மற்றும் தயாரிப்பு முறை குறித்து செயல் விளக்கம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் விவசாயிகளுக்கு பஜன்கோவா வேளாண் கல்லூரி மாணவர்கள் கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் தங்கி வேளாண் சார்ந்த கிராமப்புற பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் இணை பேராசிரியரும், ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஆனந்தகுமார் மற்றும் திட்ட அலுவலர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாக தா.பழூர் ஒன்றியம் சுத்தமல்லி கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவர்களான கார்த்திகேயன் மற்றும் பிரியதர்ஷன் ஆகியோர் மீன் அமினோ அமிலம் ஒரு வளர்ச்சி ஊக்கியாக பயிர்களுக்கு செயல்படுகிறது எனவும், அதில் உள்ள நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறினர். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி மீன் அமினோ அமிலம் கலந்து தெளிப்பதன் மூலம் வேர் வளர்ச்சி மற்றும் பயிர் வளர்ச்சி நன்றாக இருக்கும் எனவும் அதன் தயாரிப்பு முறைகளை செயல் விளக்கமாக விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர்.இக்கூட்டம் சிறப்பாக நடைபெற காதர் உசேன், லோகேஷ் மற்றும் நவீன் ஆகிய மாணவர்கள் உதவிகரமாக இருந்தனர். இக்கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கூட்டத்தின் நிறைவாக மாணவர் அபிலேஸ்வரன் நன்றி கூறினார்.
