×

தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

சிவகங்கை, ஜன.1: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு போட்டித் தேர்விற்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலம் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் வகை தேர்வுகள், டிஆர்பி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி, ஐபிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இத்தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர். இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு துறைகளில் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர். இப்பயிற்சி வகுப்புகளில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகளில் அனுபவமிக்கவர்களும், போட்டித் தேர்வுகளுக்கு ஏற்கனவே பயிற்சி அளித்துள்ள வல்லுநர்களும் பயிற்சி அளிக்கின்றனர். பாடவாரியான பயிற்சித் தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான பொது மாதிரித்தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பினை தேர்வு எழுதுவோர் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sivaganga ,Sivaganga District Employment Office ,Collector ,Porkodi ,
× RELATED ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்