கரூர், டிச. 31: கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர்.
குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக குளித்தலை போலீசார்களுக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சோதனை மேற்கொண்ட போது, அந்த பகுதியில் இருந்து 100 கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து, மணிகண்டன் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
