- சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கம்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கம்
- வி. ஆனந்த்
- உயர் நீதிமன்றம்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கம் தற்போது தனி அதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்படாத நிலையில், சங்கத்தின் தேர்தலை நடத்தக்கோரி வழக்கறிஞர் வி.ஆனந்த் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன், சங்கத்தின் வாக்காளர் இறுதி பட்டியலை தயாரிக்கும் பணியில் சங்க நிர்வாகிக்கு உதவுவதற்காக வழக்கறிஞர்கள் எல்.சந்திரகுமார், ஆர்.செல்வம், ஆர்.கிருஷ்ணகுமார், திருவேங்கடம், பர்வீன் ஆகியோர் நியமித்து உத்தரவிட்டார். இதையடுத்து, வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு நீதிமன்றம் நியமித்த குழுவின் தலைவர் சந்திரசேகரால் கூட்டுறவு சங்கங்களின் ேதர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் நடத்துவது தொடர்பான பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் ஜனவரி 28ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை பதிவு செய்த நீதிபதி, தேர்தல் நடத்தியது தொடர்பான அறிக்கையை பிப்ரவரி 5ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தனி அதிகாரி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதேபோல் வேறு ஒரு வழக்கிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தனி அதிகாரி தரப்பில் வழக்கறிஞர் எல்.பி.சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த வழக்கை தனி நீதிபதி விசாரிக்க முடியாது என்று வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
