×

சீர்காழியில் பள்ளியின் மாடித்தோட்டத்தில் பயிரிட்டுள்ள சர்க்கரைவள்ளி கிழங்கு

சீர்காழி : சீர்காழி சபாநாயக முதலியார் இந்து பள்ளியில் சர்க்கரை வள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.உலகில் ஒரு பக்கம் நோய்கள் வளர்ந்து கொண்டே வந்தாலும் அதற்கான தீர்வும் நம்மைச் சுற்றியே இருக்கும். நாம்தான் அதைத் தேடுவதில்லை.

அந்த வகையில் சர்க்கரை வள்ளி கிழங்கு நம் உடம்பில் என்னென்ன நன்மைகள் செய்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம். இயற்கையின் குளுக்கோஸ் சர்க்கரை வள்ளி கிழங்கு. ஏனென்றால் குளுக்கோஸ் போட்டால் நம் உடலில் உடனே தெம்பு வந்துவிடும். அதுபோல் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிட்ட உடனே உடனடியாக எனர்ஜியை (சக்தியை) கொடுக்கிறது.

உலக அளவில் டாப் 10 உணவுகளில் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு ஏழாவது இடம் பெற்றுள்ளது. அந்த அளவுக்கு மருத்துவ குணம் உள்ளது. புகை பிடித்து அதன் பின் விளைவால் ஏற்படும் நுரையீரல் புண் உள்ளவர்களுக்கு சர்க்கரை வள்ளி கிழங்கு ஒரு சிறந்த தீர்வாகும்.

பூமிக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகமாக இருக்கும். ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கில் மட்டும் மாவுச்சத்துக்கு இணையாக நார்ச்சத்தும் உள்ளது. கொழுப்பு மிக குறைவான அளவில் உள்ளது.

மேலும் விட்டமின் ஏ,பி சத்துக்கள் ,விட்டமின் டி போன்றவை கொட்டி கிடைக்கின்றன. குறிப்பாக விட்டமின் பி5 சத்து அதிகம் உள்ளது. இந்த சத்து குறைவினால் முகப்பருக்கள், பொடுகு மற்றும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஏற்படும் பாத எரிச்சல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களான படர்தாமரை, மூட்டு வலி போன்றவை ஏற்படும். அவற்றை போக்க இந்த கிழங்கை அதன் பருவ காலத்தில் கிடைக்கும்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இது நம் உணவில் உள்ள நச்சுக்களையும், உடலில் உள்ள கழிவுகளையும் வெளியேற்றும் தன்மை கொண்டது. வாயிலிருந்து ஆசனவாய் வரை ஏற்படக்கூடிய புற்று நோய்களை குணப்படுத்தும். மேலும் கேன்சர் செல்களை அழிக்க செய்யும்.

இதில் உள்ள மெக்னீசியம் மன அழுத்தம், மனச்சோர்வு, உள் உறுப்புகளின் வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தும். விட்டமின் டி சத்து சூரிய ஒளியில் அதிக அளவில் கிடைக்கும். அந்த சூரிய ஒளி ஒரு சிலருக்கு அதன் ஒளி அலர்ஜியை ஏற்படுத்தும் அந்த பற்றாக்குறையை போக்க இந்தக் கிழங்கை எடுத்துக் கொள்ளலாம்.

குளிர்காலங்களில் தோலில் பனி பற்று ஏற்படுவதை தடுக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை மதியம் இவற்றிற்கு இடைப்பட்ட நேரங்களில் அல்லது மதியம், இரவு உணவு இடைவேளையில் 100 கிராம் அளவில் வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த கிழங்கை அதிகமாக எடுத்துக் கொண்டால் வாய்வு பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து பள்ளியில் நிர்வாக அலுவலர் தங்கவேலு பள்ளி மாடித்தோட்டம் அமைத்து பல்வேறு காய்கறி செடிகளை பயிரிட்டு வருகிறார்.

தற்போது பள்ளியின் மாடிதோட்டத்தில் சர்க்கரைவள்ளி கிழங்கு பயிரிட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு இளம் வயதில் சர்க்கரை வள்ளி கிழங்கின் பயன்களை அறிந்து கொள்ள இந்த முயற்சி உறுதுணையாக உள்ளதாக பள்ளி நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags : Sirkazhi ,
× RELATED 428 நாட்களாக 100-அடிக்கு மேல் நீடிக்கும்...