×

அனுமன் ஜெயந்தி நாளை கொண்டாட்டம் சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்பாபிஷேகம்: 1 லட்சம் லட்டுகள், வடைமாலை தயார்

நாகர்கோவில்: ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி சுசீந்திரத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு நாளை சிறப்பு அபிஷேகங்கள், புஷ்பாபிஷேகம் நடக்கிறது. பக்தர்களுக்கு வினியோகம் செய்ய 1 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று அனுமன் ஜெயந்தி ஆகும். மார்கழி மாதம் அமாவாசையுடன் வரும் மூல நட்சத்திரத்தில் அனுமன் அவரித்ததாக கூறப்படுகிறது. அந்த நாள் தான் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படும்.

அதன்படி நாளை (19ம்தேதி) அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் விரதமிருந்து ஆஞ்சநயரை வழிபட்டால், ஆனந்த வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும். பல்வேறு கோயில்களில் அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜைகள் நடந்தாலும், குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன்சுவாமி கோயிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்ச நேயருக்கு நடக்கும் அனுமன் ஜெயந்தி விழா பூஜைகள் சிறப்பானதாகும். அன்றைய தினம், புஷ்பாபிஷேகமும் வெகு விமரிசையாக நடைபெறும்.

அதன்படி நாளை (வெள்ளி) ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு பல்வேறு வகையிலான அபிஷேகங்கள் நடக்கின்றன. மஞ்சள் பொடி, நெய், இளநீர், நல்லெண்ணெய், திரவியப்பொடி (களபம்), பன்னீர், தேன், பால், அரிசி மாவுப்பொடி, விபூதி, தயிர், எலுமிச்சை சாறு, குங்குமம், சந்தனம், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் ஆகிய 16 வகையிலான பொருட்கள் மூலம் ஷோடச அபிஷேகம் நடக்கிறது. காலை 8 மணிக்கு இந்த அபிஷேகங்கள் தொடங்குகின்றன.

முன்னதாக காலை 5 மணிக்கு, ஆஞ்சநேயர் சன்னதிக்கு எதிரே உள்ள ஸ்ரீராமர் சன்னதியில் அபிஷேகங்கள் நடக்கின்றன. பின்னர் மதியம் 12 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6.30க்கு பஜனை நடைபெறுகிறது. பின்னர் இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது.

இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அன்று காலை 9 மணிக்கு கோயிலில் அன்னதானம் தொடங்குகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக 1 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மேலும் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வடைமாலையும் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் ஜாண்சி ராணி மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் செய்துள்ளனர்.

Tags : Hanuman Jayanti ,Suchindram ,Anjaneyar ,Nagercoil ,Anjaneyar Jayanti ,Hindus ,Margazhi ,
× RELATED வி பி – ஜி ராம் ஜி என்ற புதிய...