சிவகாசி, டிச. 17: நடுரோட்டில் தகராறு செய்ததை கண்டித்த தம்பதியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகாசி அருகே திருத்தங்கல் சத்யாநகரை சேர்ந்தவர் கண்ணன் (32). இவரது மனைவி மகாலட்சுமி. இருவரும் பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் சத்யாநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த திருவள்ளுவர் நகரை சேர்ந்த மாரீஸ்வரன் (எ) அந்தோணி (19), அவரது 17 வயது நண்பர் இருவரும் மது போதையில் தகராறு செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ணன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி மற்றும் அவரது நண்பர் இருவரும் தம்பதியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து அந்தோணி மற்றும் அவரது நண்பர் 2 பேரையும் கைது செய்தனர்.
