திருவள்ளூர், டிச.11: திருவள்ளூர் மாவட்ட கோட்டாட்சியர்கள் அலுவலகங்களில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது என்று கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்டளவில் நாளை (12ம்தேதி) காலை 10 மணியளவில் திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்திப்பட உள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காண, அந்தந்த வருவாய் கோட்டங்களில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இக்கூட்டத்தில், அனைத்துத்துறை அலுவலர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் தீர்க்கும் நாள் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, இக்கூட்டத்தில் விவசாயிகள் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
