திருச்செந்தூர் ஜன. 4: திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதையொட்டி நேற்று மதியம் 11.30 மணிக்கு ஆலய பங்குதந்தை சில்வெஸ்டர், வார வழிபாடு நடத்தினார். தொடர்ந்து மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலியுடன் மறையுரை நிறைவேற்றப்பட்டது.
இதில் பங்குதந்தைகள் பன்னீர்செல்வம், விக்டர் லோபோ, செல்வன், பென்சிகர், கிராசியூஸ், பீட்டர் பவுல், பாக்ய பவுல், பாலன், லூசன், அமல், கார்லோ, இதயன், ஷிபாகர், டேவிட் சகாய வளன், ரத்தினராஜ், ஜார்ஜ், ஜோதிமணி, திருத்தொண்டர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக ரொசாரிமாதா சபையினர், ஊர் நலக்கமிட்டியினர், அருட்சகோதரிகள், பக்த சபைகள், அன்பியங்கள், மீனவ சங்கங்கள், கப்பல் மாலுமி சங்கம், அனைத்து பள்ளிகள் என அனைவரும் ஆயரிடம் கல்வி நிதியை வழங்கினர். அப்போது நாளை (5ம் தேதி) முதல் மணப்பாடு மறை வட்டத்திலுள்ள அனைத்து பங்குகளுக்கும் இயேசுவின் திரு இருதய சொரூபத்துடன் புனித மர்கரீத் மரியாளின் புனிதப் பண்டம் பவனியாக ஆலந்தலையில் இருந்து எடுத்துச் செல்லப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. நேற்று மாலை இயேசுவின் திரு இருதய சப்பரப் பவனி மற்றும் ஆசீர்வாதம் நடைபெற்றது. முதல் வெள்ளிக்கிழமை திருப்பலியில் ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்து கொண்டனர்.
