- சேலம் சுயாதீன போலீஸ்
- சேலம்
- சாமிநாதன்
- தீவதிபட்டி
- உம்பிலிக்கம்பட்டி
- ஓமலூர், சேலம் மாவட்டம்
- ராணி
- நல்லதம்பி
சேலம்: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி உம்பிலிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சாமிநாதன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி ராணி. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், இவருடன் அதே ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நல்லதம்பி என்பவர் பழகி வந்துள்ளார். இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2000ம் ஆண்டில் ராணி, நல்லதம்பியுடன் இருந்த தொடர்பை துண்டித்துக் கொண்டு விலகி சென்றுள்ளார். இதனால் நல்லதம்பி, ராணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராணியை, கட்டையால் தலையில் அடித்து நல்லதம்பி கொலை செய்துள்ளார்.
பின்னர், தப்பியோடி தலைமறைவாகி விட்டார். நீண்ட நாட்களாக கொலையாளி பிடிபடாமல் இருந்த இந்த வழக்கில், நல்லதம்பியை பிடிக்க சேலம் எஸ்பி கௌதம்கோயல் தனிப்படை அமைத்தார். ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், 25 ஆண்டுகளுக்கு முன் ராணியை கொலை செய்து விட்டு தலைமறைவான நல்லதம்பி பற்றி தீவிரமாக விசாரித்தனர். அதில், சொந்த ஊரை விட்டு வெளியே சென்ற நல்லதம்பி, 4, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு வந்து, உறவினர்களை பார்த்துச்செல்வது தெரியவந்தது.
இதனால் அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று, உம்பிலிக்கம்பட்டிக்கு வந்த நல்லதம்பியை (60) தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதில், கடந்த 2000ம் ஆண்டில் தகாத உறவை துண்டித்துக் கொண்டதால், ராணியை கொலை செய்து விட்டு, ஆந்திராவுக்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து காலத்தை கடத்தி வந்துள்ளார்.
அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து, உறவினர்களை பார்த்துச்சென்றதாகவும், தற்போது சிக்கிக்கொண்டதாவும், போலீசில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் நல்லதம்பியை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். பெண்ணை 35 வயதில் கொலை செய்து விட்டு, தலைமறைவான கொலையாளியை, 25 ஆண்டுகள் கழித்து 60 வயதில் கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்பி கௌதம்கோயல் பாராட்டியுள்ளார்.
