×

31ம் தேதி வரை நடக்கிறது அரசு ஐடிஐக்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை

விருதுநகர், ஜூலை 24: அரசு ஐடிஐக்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை ஜூலை 31 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி ஆகிய இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இவற்றில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை ஜூலை 16 துவங்கி ஜூலை 31 வரை நடைபெறுகிறது.

ஏற்கனவே விண்ணப்பித்து ஓதுக்கீடு கிடைக்காதவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவியர் அரசு நிர்ணயித்துள்ள 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் தொழிற்பிரிவுகளான பிட்டர், ரோபோட்டிக் டெக்னிசியன், டர்னர், மெசினிஸ்ட், வெல்டர், மோட்டார் மெக்கானிக், சர்வேயர் உள்ளிட்ட 13 பிரிவுகளில் முதல்வர்களை அணுகி நேரடி சேர்க்கை மூலம் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கொள்ளலாம்.

பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடகருவிகள், காலணி, பஸ்பாஸ், மாத உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். மேலும் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு உயர்கல்வி உறுதித்திட்டத்தில் மாதம் தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி முடித்த பின் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post 31ம் தேதி வரை நடக்கிறது அரசு ஐடிஐக்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar Collector ,Jayaseelan ,Aruppukottai ,Chathur ,Tiruchuzhi ,
× RELATED 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்