×

புதுக்கோட்டை மாவட்டத்தில் சோலார் பம்பு செட்டுகள் மானியத்தில் அமைக்க விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஏப்.28: தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 15 குதிரை திறன் வரையிலான மின் கட்டமைப்புடன் சாராத தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் மானிய விலையில் அமைத்திட விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மின் விநியோகத்தைக் குறைக்கவும், இலவச மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளின் நலனுக்காகவும் PM KUSUM திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் 3HP முதல் 15HP வரை பம்பு செட்டுகள் குறு, சிறு விவசாயிகளுக்கு அமைத்துத் தரப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 60 சதவீத மானியத்திலும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் விவசாயிகள் சிறு குறு விவசாயிகளாக இருக்கும் பட்சத்தில் 80 சதவீத மானியத்திலும் சோலார் பம்பு செட்டுகள் அமைத்துத் தரப்படும்.

சோலார் பம்பு செட்டுகள் அமைப்பதற்கான நிறுவனங்கள், விலை விவரங்கள் சென்னை வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பாதுகாப்பான குறுவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், நிலத்தடி நீர் பாதுகாப்பற்ற குறுவட்டங்களில் ஆயில் என்ஜின் பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மானிய விலையில், தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்கள் அருகிலுள்ள உபகோட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை புதுக்கோட்டை (நெடுஞ்சாலைத் துறை அருகில், திருக்கோகர்ணம்) அலைபேசி எண் 94434 05997 மற்றும் உதவி செயற்பொறியாளர் (வே.பொ.) நைனா முகமது கல்லூரி, இராஜேந்திரபுரம், அறந்தாங்கி அலைபேசி எண் 95009 88606 அல்லது செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, புதுக்கோட்டை (நெடுஞ்சாலைத் துறை அருகில், திருக்கோகர்ணம்) தொலைபேசி எண் 04322-221816 அலுவலகத்தை அணுகலாம். மேலும், விவரத்தை pmkusum.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் சோலார் பம்பு செட்டுகள் மானியத்தில் அமைக்க விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Pudukkottai district ,Pudukkottai ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...