பாலக்கோடு, ஜூலை 5: காரிமங்கலம் அருகே பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து, தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள மாட்லாம்பட்டி பெரியபுதூரை சேர்ந்தவர் அனிதாதேவி(28). பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், தனது தம்பி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மாரவாடி அருகே உள்ள காமராஜ்நகரில் வசித்து வரும் நவீன்குமார் (29) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நவீன்குமார், அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். தற்போது, திருமணம் செய்து கொள்ளுமாறு அனிதாதேவி வற்புறுத்தியும், அவர் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து, அனிதாதேவி நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் விஷபாட்டிலுடன் தர்ணாவில் ஈடுபட்டார். அவர் பாலக்கோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், வழக்கு பதிவு செய்து தலைமறைவான நவீன்குமாரை தேடி வருகிறார்.
The post திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.
