×

திருப்பூரில் கொடூரம் வாலிபர் படுகொலை; தலையை துண்டித்து எடுத்துச்சென்ற கும்பல்: மற்றொருவர் ரத்த வெள்ளத்தில் ஊருக்குள் ஓடி வந்ததால் மக்கள் அதிர்ச்சி

திருப்பூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் சதீஷ் (23). திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் ரஞ்ஜித்குமார் (22). நண்பர்களான இருவரும் 2 நாட்களாக திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 2 பேரும் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு தங்கியிருந்த அறைக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு பைக்குகளில் வந்த 5 பேர் கும்பல் திடீரென சதீஷ், ரஞ்ஜித்குமாரிடம் கத்தியை காட்டி செல்போனை பறிக்க முயன்றது. செல்போனை தர மறுத்து இருவரும் அவர்களை தட்டிக்கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் 2 பேரையும் அங்குள்ள செரங்காடு  கடுக்காதோட்டம் பகுதியில் உள்ள மைதானத்திற்கு கடத்திச்சென்றது. அங்கு 5 பேரும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சதீசையும், ரஞ்ஜித்தையும் சரமாரியாக தாக்கினர். இதில் ரஞ்ஜித்துக்கு உடலின் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து அவர் கும்பலிடம் இருந்து தப்பி அங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்றார். ரத்த வெள்ளத்தில் அவர் ஓடி வருவதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து நல்லூர் போலீசாருக்கு தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் மயங்கி கிடந்த ரஞ்ஜித்தை மீட்டு  திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்கம் தெளிந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தனது நண்பன் சதீஷ் மர்ம கும்பலிடம் சிக்கிக்கொண்டதாகவும், அவனை காப்பாற்றுமாறும் ரஞ்சித் கூறினார். உடனே போலீசார் செரங்காடு கடுக்காதோட்டம் பகுதியில் உள்ள மைதானத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு சதீஷ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் முண்டமாக  கிடந்தார். 5 பேர் கும்பல் சதீஷ் தலையை கொலை செய்ததுடன் தலையை துண்டித்து எடுத்து சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் துண்டிக்கப்பட்ட தலையை அப்பகுதி முழுவதும் தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் உடலை மட்டும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர். சதீசை கொன்ற கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை.  அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து கொலையாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்….

The post திருப்பூரில் கொடூரம் வாலிபர் படுகொலை; தலையை துண்டித்து எடுத்துச்சென்ற கும்பல்: மற்றொருவர் ரத்த வெள்ளத்தில் ஊருக்குள் ஓடி வந்ததால் மக்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Brutal youth massacre ,Tirupur ,Satish ,Kumbakonam ,Tanjore district ,Ranjith Kumar ,Thiruvanaikaval ,Trichy ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் குடும்ப...