கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 18வது வார்டு தேட்டமுலா பகுதியில் தனியார் நிலத்தில் சாலையோரமாக சுற்றுச்சுவர் அற்ற கிணறு ஒன்று உள்ளது. பாதுகாப்பற்ற இக்கிணறு பொது மக்கள் மற்றும் விலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சுமார் 30 அடி விட்டமும் 40 அடி ஆழமுமுள்ள இக்கிணறு அமைந்துள்ள பகுதியில் தெருவிளக்கும் இல்லாத நிலையில் இரவில் இவ்வழித்தடத்தில் வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இக்கிணற்றில் கார் ஒன்று நிலை தடுமாறி உள்ளே விழ இருந்த நிலையில், அப்பகுதி மக்கள் காரில் வந்தவர்களை காப்பாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் இப்பகுதியில் நடமாடும் வன விலங்குகளுக்கும் இந்த கிணறு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
