×

அரசு கல்லூரிக்கு ₹14.74 கோடியில் புதிய கட்டிடம்

தேன்கனிக்கோட்டை, ஏப்.28: தேன்கனிக்கோட்டை அருகே அரசு பள்ளியில் செயல்பட்டு வந்த தற்காலிக அரசு கல்லூரிக்கு, ₹14.74 கோடியில் கட்டுமான பணிகளை, அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, சந்தனப்பள்ளியில் ₹14.74 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமான பணிகளை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். கலெக்டர் தீபக் ஜேக்கப், செல்லகுமார் எம்பி, எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், அமைச்சர் காந்தி பேசியதாவது: நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராம பகுதிகளில், அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், மலைவாழ் பகுதி மாணவ, மாணவிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில், தளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிக அரசு கலைக்கல்லூரி கட்டிடத்தை, கடந்த ஆண்டு ஜூலை 7ம் தேதி, ெசன்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

இக்கல்லூரியில் தமிழ், வணிகவியல், கணினி அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு, தற்போது தேன்கனிக்கோட்டை அருகே ₹14.74 கோடியில் கட்டுமான பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி 4809.29 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. மலை கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு, இக்கல்லூரி முத்தாய்ப்பாக அமையும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ஓசூர் சப் கலெக்டர் சரண்யா, தர்மபுரி மண்டல உயர்கல்வி இணை இயக்குநர் ராமலட்சுமி, தளி அரசு கலைக்கல்லூரி முதல்வர் மாறன், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏ முருகன், தாசில்தார் சரவணமூர்த்தி, பிடிஓக்கள் கோபாலகிருஷ்ணன், விமல்ரவிக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தற்போது கல்லூரிக்கு ரூ.14.24 கோடியில் புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில் வரும் நாட்களில் மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி பயனுள்ளதாக இருக்கும். மேலும் மாணவர்களின் விளையாட்டு திறன், கல்வி அறிவு, கற்றல்திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

The post அரசு கல்லூரிக்கு ₹14.74 கோடியில் புதிய கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Govt College ,Dhenkanikottai ,Dinakaran ,
× RELATED மாணவர்கள் போராட்டம்; குடந்தை அரசு கல்லூரி காலவரையின்றி மூடல்