மதுரை: கரூரில் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் நில பட்டா மாறுதலுக்கான தடையை நீக்கிய அரசாணைக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி ஐகோர்ட் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கரூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோயில், ரவீஸ்வரர் சுவாமி கோயில், குப்புச்சிபாளையம் விக்ருதீஸ்வரர் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளன. இந்த நிலங்கள் 3,390 தனி நபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டது. பின்னர் இந்த நிலங்களை பட்டா மாறுதல் செய்ய தடை விதிக்கப்பட்டது.
கோயில்களுக்கு சொந்தமான ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3,085 ஏக்கர் நிலங்களுக்கு பட்டா மாறுதல் செய்வதற்கான தடையை நீக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோயில் நிலங்களை பட்டா மாறுதல் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் மனுதாரர் முறையீடு செய்தார். அப்போது நீதிபதிகள், மனுதாரர் முறையாக மனு தாக்கல் செய்தால், அதை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து மனு தாக்கல் ெசய்யப்பட்டது.
