சென்னை: அதிமுக-விலிருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் இருக்கிறார்கள் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார். அதிமுக போல ஜனநாயகத்துடன் இயங்க கூடிய இயக்கம் தமிழகத்தில் வேறு எதுவும் இல்லை. அதிமுக என்பது ஒரு குடும்பம் பல்வேறு சாதி, மதங்களை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இருக்கிறோம்.
கட்சியை விட்டு துரோகிகள் வெளியேறி வருதால் அடிமட்டத் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அரை நூற்றாண்டு கால வரலாற்று பாரம்பரியம் கொண்ட அதிமுகவை யாராலும் அழித்துவிட முடியாது. இரட்டை இலை சின்னத்தில் மக்கள் வாக்களித்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களை பதவி விலகச் செய்து, சிலர் தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள். மக்களுக்கென்று களத்தில் நின்று எதையும் செய்யாமல் த.வெ.க ஆட்சிக்கு வந்துள்ளது என்றார். வரும் தேர்தல்களில் மகளிரணியினர் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும்; அவர்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டுள்ளார்.
சமீபத்தில் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம். எஸ். எம். ஆனந்தன் போன்ற முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகிய சூழலில், எடப்பாடி பழனிசாமியின் இந்த துரோகிகள் விமர்சனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனிடையே இந்த கூட்டத்தில் அதிமுக-வின் முக்கிய மூத்த தலைவர்களான எஸ். பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் எடாப்டி பழனிசாமி மீது மீண்டும் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
