சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 68 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் சுங்கச்சாவடிகளில், ஆண்டுதோறும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் சுங்கக்கட்டண உயர்வு, இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது தேர்தல் நடைமுறைகள் முழுமையாக நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய திருத்தப்பட்ட சுங்கக்கட்டண உயர்வு அதிகாரப்பூர்வமாக நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன. இந்த புதிய கட்டண விகிதங்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31, 2027 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஒப்பந்த விதிமுறைகளின்படி, நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் ஒவ்வோர் ஆண்டும் பணவீக்கம் மற்றும் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
அந்தவகையில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளன. லாரி, பேருந்து மற்றும் பல அச்சு கொண்ட பெரிய சரக்கு வாகனங்களுக்கான கட்டண உயர்வு மற்றும் மாதாந்திர பாஸ் விலை அதிகரிப்பு ஆகியவை மறைமுகப் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது.
