திருச்செங்கோடு, மே 28:திருச்செங்கோட்டில் 2 ஜவுளி கடைகளின் பூட்டை உடைத்து, ரூ.8.60 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வடக்கு ரத வீதியில் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, 2 ஜவுளி கடைகளில் வெண்டிலேட்டர் பகுதியில் ஓட்டை போட்டும், மேற்கூரையை உடைத்தும் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர், கல்லாவில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.
ஒரு ஜவுளிக்கடையில் ரூ.5 லட்சத்து 80 ஆயிரத்தையும், இன்னொரு கடையில் ரூ.2.80 லட்சத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கடைகளின் ஒவ்வொரு தளத்திலும் லாக்கர்கள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், கொள்ளையர்கள் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை அணைத்து விட்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, ஜவுளிக்கடைகளின் உரிமையாளர்கள் திருச்செங்கோடு நகர போலீசில் புகார் அளித்தனர்.
அதன் பேரில், டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையில் வந்த போலீசார், 2 கடைகளிலும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டன. மேலும், அருகில் உள்ள கடைகளின் சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி, கொள்ளையர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
