×

சங் பரிவார்களின் வெறுப்பு அரசியலுக்கு இங்கே இடமில்லை ; கூட்டணி ஆட்சியை வழிமொழிந்துள்ள மக்களுக்கு மனமார்ந்த நன்றி – திருமாவளவன் அறிக்கை

சென்னை: சங் பரிவார்களின் வெறுப்பு அரசியலுக்கு இங்கே இடமில்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்தி உள்ளனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்து உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள திருமானவளவன், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி முன்னெடுத்த மதச்சார்பின்மைக்கான அறப்போர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்று கூறி உள்ளார்.

மதவழி சிறுபான்மையினருக்கும் இன்னபிற விளிம்புநிலை மக்களுக்கும் எதிரான சங் பரிவார் அரசியலைத் தமிழ் மண்ணில் வேரூன்றவிடக் கூடாது என்பதே எமது கூட்டணியின் முதன்மையான நோக்கமாக இருந்தது. அதனையே முழுமூச்சாக முன்னிறுத்தி மிகத் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டோம். அதனை ஏற்று பொதுமக்கள் அதிமுக -பாஜக கூட்டணியை வீழ்த்தி அவர்களின் சதி அரசியலை முறியடித்துள்ளனர். குறிப்பாக, 27 இடங்களில் போட்டியிட்ட பாஜகவை 26 இடங்களில் வீழ்த்தியுள்ளனர். அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாடம்புகட்டியுள்ள அதே வேளையில், மதசார்பற்ற சக்திகளான எமது கூட்டணிக்கும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை வழங்கவில்லை. இது எமக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தாலும், அதிமுக தலைமையிலான சாதிய- மதவாத சங் பரிவார் கூட்டணியை மக்கள் வெகுவாகப் புறக்கணித்துள்ளனர் என்பது திமுக கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், கடந்த 2021 சட்டப் பேரவை தேர்தலில் 66 இடங்களில் வென்ற அதிமுக தற்போது 19 இடங்களை இழந்து நிற்கிறது. 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது அதிமுக பாஜகவுடன் கை கோர்த்து நின்றதற்காக மக்கள் அளித்துள்ள படிப்பினை ஆகும். சட்டமன்ற பொதுத் தேர்தலில், அதிமுக தலைமையிலான பாஜகவின் சதி அரசியலை முறியடித்தோம் என்கிற மகிழ்வோடு தமிழக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனப்பூர்வமாக வரவேற்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கணிசமான அளவில் வெற்றிகளை வழங்கியுள்ள மக்களுக்கு எமது நன்றியை உரித்தாக்குகிறோம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்மொழிந்த கூட்டணி ஆட்சியை வழிமொழிந்துள்ள தமிழக மக்களுக்கு தன்னுடைய மனமார்ந்த நன்றியையும் திருமாவளவன் தெரிவித்து கொண்டுள்ளார். ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனி பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத வகையில் மக்கள் இந்த தேர்தலில் தீர்ப்பு அளித்துள்ளனர்.

இந்த தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு மிகவும் நுட்பமான அரசியலை நமக்கு உணர்த்துகிறது என்றும் கூறி இருக்கிறார். தமிழ்நாட்டை பொறுத்த வரை மக்கள் கூட்டணி ஆட்சியையே விரும்புவதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்து உள்ளார். அதிமுக – பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுக கூட்டணிக்கு மட்டுமின்றி தவெக-வுக்கும் இயல்பாய் பிரிந்து போனதை அறியமுடிகிறது. அதாவது, திமுக அணிக்கும் தவெக-வுக்கும் மக்கள் அளித்துள்ள வாக்குகள் மற்றும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை யாவும் அதிமுக தலைமையிலான சங் பரிவார் அரசியலுக்கு எதிரானவை என்பதை இத்தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது. அதாவது, தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் அதன் வலதுசாரி அரசியலுக்குத் துணைபோகும் கும்பலுக்கும் இடமில்லை என்பதை மிகவும் வலுவாக மீள்உறுதி செய்துள்ளது என்றும் அறிக்கையில் திருமாவளவன் கூறி இருக்கிறார்.

Tags : Sung Parivars ,Thirumaalavan ,Chennai ,Liberation Leopards Party ,Thirumavalavan ,Tamil Nadu Assembly ,Thirumanavalavan ,
× RELATED தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை...