ஐதராபாத்: இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, தற்போத விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘ரணபாலி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட ‘மைசா’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் இடம்பெறும் சண்டை மற்றும் நடனக்காட்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் வெளியூரில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்ற ராஷ்மிகா மந்தனா, கடுமையான நடனக்காட்சி ஒன்றில் நடித்தார். அப்போது எதிர்பாராவிதமாக அவரது இடுப்பு தசைநார் விலகி காயம் ஏற்பட்டது. விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே அரிதாக நடக்கும் இதுபோன்ற கடுமையான தசைநார் விலகல், தற்போது முன்னணி நடிகைக்கு ஏற்பட்டு இருப்பது மருத்துவ வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து, ராஷ்மிகா மந்தனாவின் இடுப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட தசைநார் பூரணமாக குணமடைய, அவருக்கு 6 வாரங்கள் கட்டாய ஓய்வு மற்றும் கண்காணிப்புடன் கூடிய உயரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று டாக்டர்கள் அட்வைஸ் செய்துள்ளனர். இதனால், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்த பின்பு, ரவீந்திர புல்லே இயக்கத்தில் ‘மைசா’ என்ற ஆக்ஷன் திரில்லர் படத்தின் ஷூட்டிங்கில் ராஷ்மிகா மந்தனா பங்கேற்று வந்தார். இதில் அவர், கோண்ட் பழங்குடியின பெண்ணாக வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். காயம் குறித்து ராஷ்மிகா மந்தனா மற்றும் அவரது தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
