சென்னை: தமிழில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம், ‘அண்டர் 18’. இதில் முக்கிய வேடங்களில் கிச்சா சுதீப், விக்ராந்த் நடிக்கின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பேட்டி வருமாறு: அக்கா, தம்பிக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டம்தான் ‘அண்டர் 18’ படத்தின் கதை. எனது தம்பியாக கார்த்திகேயன் நடிக்கிறார். ஒசூர் பகுதியில், சில உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகிறது. தமிழில் எனக்கு திடீரென்று ஒரு இடைவெளி ஏற்பட்டது.
நிறைய புதுப்பட வாய்ப்புகள் வந்தாலும், எனக்கு மிகவும் பிடித்த கதையும், கேரக்டரும் அமையாததால் காத்திருந்தேன். நான் நடித்த ‘காக்கா முட்டை’, ‘கனா’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘டிரைவர் ஜமுனா’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘சொப்பன சுந்தரி’, ‘ஃபர்ஹானா’ போன்ற படங்கள், எனது கேரக்டரை மையமாக வைத்து உருவானவை. தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். சென்னையில் சொந்த வீடு இருக்கிறது. மற்றபடி ஐதராபாத்தில் நான் குடியேறியுள்ளதாக வெளியான தகவல் பொய். எனது திருமணம் குறித்து யோசிக்கவில்லை. எப்போது நடந்தாலும், கண்டிப்பாக அது காதல் திருமணமாகத்தான் இருக்கும். மீடியாவுக்கும், ரசிகர்களுக்கும் சொல்லிவிட்டு திருமணம் செய்வேன். ரகசிய திருமணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

