கிளப்பில் நடிகை மீது திடீர் தாக்குதல்

மும்பை: பாலிவுட் நடிகை பிரீத் சிங், சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபல மாடல் அழகியாகவும், உடற்பயிற்சி நிபுணராகவும் அறியப்படுகிறார். இந்நிலையில், மும்பையிலுள்ள இரவு நேர கிளப் ஒன்றில் பிரீத் சிங் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிளப்பிற்கு தனது தோழியுடன் பிரீத் சிங் சென்றபோது, அங்கிருந்த மற்றொரு பெண்ணுடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இப்பெண் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கிறார்.

அப்போது அந்த பெண்ணுடன் வந்த ஆண் நபர், பிரீத் சிங்கை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பிரீத் சிங்கின் பல் உடைந்து, கண் மற்றும் முகம் வீங்கி பலத்த காயங்கள் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து பிரீத் சிங் தனது இன்ஸ்டாகிராமில் காயங்களுடன் கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ‘பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்று கருதப்படும் மும்பையில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது’ என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பிரீத் சிங்கின் சக போட்டியாளர்கள் ஜலக் கோஹில், ரூரு தாக்கூர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து, அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரீத் சிங் போலீசில் புகார் அளிக்காதது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: