நெல்லிக்குப்பம், ஆக. 4: நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு பகுதியில், கடலூர்-பண்ருட்டி சாலையில் பூரணி புஷ்கலா சமேத வில்லுக்கட்டி ஐயனாரப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான இடம் வரக்கால்பட்டு பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள குளத்தின் எதிரில் சாலை ஓரத்தில் உள்ளது. இந்த இடத்தில் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கரும காரியங்கள் செய்து வந்தனர். தற்போது அப்பகுதியில் குடியிருப்பு வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் அங்கு கர்ம காரியம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வரக்கால்பட்டு பகுதியை சேர்ந்த பழனியம்மாள்(65) என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன் இறந்தார். இவரது கரும காரியங்கள் இன்று நடைபெறுவதை முன்னிட்டு நேற்று பழனியம்மாளின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டடோர் கரும காரியம் செய்யும் இடத்தை சீரமைக்க வந்தனர்.
அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இரு தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தற்போது எதிரே உள்ள நெல் களத்தில் கரும காரியம் செய்து கொள்ளுங்கள். பின்னர் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் மூலம் பேசி சுமுக முடிவு எடுக்கப்படும் எனக் கூறி இரு தரப்பினரையும் கலைந்து செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
