×

தமிழகத்தில் காலணி உற்பத்தி நிறுவனங்கள் 3 ஆண்டுகளில் ரூ.16,000 கோடி முதலீடு: மத்திய காலணி பயிற்சி நிறுவன இயக்குநர் பேட்டி

 

சென்னை: ஒன்றிய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைச்சகத்தின் தன்னாட்சி நிறுவனமான மத்திய காலணி பயிற்சி நிறுவனம் காலணி உற்பத்தித் தொடர்பான தொழில்முறைப் பயிற்சி பாடத்திட்டங்களுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர் முரளி சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:காலணி உற்பத்தித்துறை அதிக அந்நிய செலாவணி மற்றும் அதிக வேலைவாய்ப்புகளை கொடுக்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் இந்தியாவில் உற்பத்தியாகும் 50 சதவீத தோல் காலணிகள் தமிழகத்தில் உற்பத்தியாகிறது.

தற்போது, தோல் அல்லாத காலணி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.16,000 கோடி முதலீடு செய்துள்ளார்கள். குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உலகின் முன்னணி காலணி உற்பத்தி நிறுவனங்கள் தொழிற்சாலைகளை தொடங்கியுள்ளார்கள்.

இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கான 7 பயிற்களை மத்திய காலணி பயிற்சி நிறுவனம் வழங்குகிறது. இந்த பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்கள் மிகப்பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும் துறை இது. இங்கு வழங்கப்படும் பயிற்சிகள் எல்லாம் தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி மன்றத்தின் அங்கீகாரம் பெற்றவை.

விளையாட்டுகளுக்கு பயன்படுத்தப்படும் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமையும் இடத்தில் உள்ள தமிழக அரசின் ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடம் அளித்தால் அங்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். தற்போது இந்தியாவில் காலணி அளவு அமைப்புக்கு இங்கிலாந்து முறையை பயன்படுத்தும் நிலையில், இந்திய அளவுளுக்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Central Footwear Training Institute ,Chennai ,Union Government ,Ministry of Micro, Small and Medium Enterprises ,Murali ,Chennai… ,
× RELATED அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பால் பரபரப்பு