திருவண்ணாமலை மாட வீதியில் அனுமதியின்றி இயங்கிய 12 ஆட்டோக்கள் பறிமுதல்: 14 வாகனங்களுக்கு அபராதம்

 

திருவண்ணாமலை, ஆக. 3: திருவண்ணாமலை மாட வீதியில் அனுமதி இன்றி இயக்கிய 12 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாடவீதியில் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மேலும், வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் வழங்கிய கியூஆர் கோடு ஒட்டப்பட்டுள்ள கார் மற்றும் ஆட்டோக்களுக்கு மட்டுமே மாட வீதியில் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனாலும், அனுமதி இல்லாத வெளிமாவட்ட மற்றும் வெளி மாநில கார்களால் மாட வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல் அனுமதி இல்லாத ஆட்டோக்கள் நூற்றுக்கணக்கில் மாட வீதியில் வலம் வருகின்றன.

இந்நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருணாநிதி தலைமையில் நேற்று மாடவீதியில் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கியூஆர் கோடு இல்லாத அனுமதி பெறாத ஆட்டோக்கள் மாட வீதியில் இயக்கப்படுவது கண்டறியப்பட்டு 12 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக 14 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 

Related Stories: