மைசூரு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால், கரையோர மக்களின் பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து 12,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என கர்நாடக காவிரி பாசன கழகம் தெரிவித்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே காவிரி நதிநீர் பிரச்னை நீடித்து வரும் நிலையில், மைசூரு தரப்பில் இருந்து சற்று ஆறுதலான செய்தி வெளியாகியுள்ளது.
கபினி படுகையில் மழை பெய்து வருவதால் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. தற்போது கபினி அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றின் அருகே வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.காவிரி பாசன கழகத்தின் தகவலின்படி, கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி கொண்ட கபினி நீர்த்தேக்கத்தில் 2,181 அடி நீர் உள்ளது.
நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு 19,037 கனஅடி நீர்வரத்து பதிவானது. அணை நிரம்ப 4 அடியே உள்ளதால் கரையோர மக்களின் பாதுகாப்பு கருதி 12,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என காவிரி பாசன கழகம் தெரிவித்துள்ளது. இந்த தண்ணீர் கபினி அணையில் இருந்து ஷிம்ஷா வழியாக மேட்டூர் அணையை அடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
