மணலி, ஆக.1: மணலி, ஹரிகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகரன்(43), பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுந்தரி(37). இருவருக்கும் குழந்தை இல்லாத நிலையில் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே உடல் நிலை பாதித்த சுந்தரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மனைவியின் இறுதி சடங்கை செய்து முடித்த ராஜசேகரன் மனைவி இல்லாத சோகத்தில் மிகுந்த மனவேதனைக்கு ஆளானார். உறவினர்கள் அவரை சமாதானம் செய்த நிலையில், நேற்று முன்தினம் காலை, வீட்டில் மின்விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மணலி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் இறந்த ராஜசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
