சத்ரபதி சம்பாஜி நகர்: டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பெல்லட் குண்டு மூலம் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதில் ஒரு மாணவனுக்கு கண் பார்வை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு குற்றம் சாட்டினார். மேலும் மாணவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். எனவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கே தனது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம், சத்ரபதி சம்பாஜி நகரில் நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. கட்சிகளை உடைக்க புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்பது வெறும் எதிர்க்கட்சிப் பிரச்னை மட்டுமல்ல. அதைக் காப்பாற்ற நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும்.
நீதித்துறையின் மீதே ஒரு கேள்விக்குறி எழுந்துள்ளது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளை உடைக்க அமலாக்கத்துறையும் சிபிஐயும் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை நாம் பார்த்திருக்கிறோம். நாட்டில் உள்ள பெரிய அமைப்புகளுக்கு, ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதும், ஒரு தனி மனிதனின் சர்வாதிகாரத்தை உருவாக்காமல் தடுப்பதும் கடமையாக இருந்தது. ஆனால், அவர்கள் அதை நடக்க அனுமதித்துவிட்டனர். இதைத் தடுக்க, எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, மக்களும் ஒன்றிணைய வேண்டும்.
ஜூலை 20ம் தேதி மாணவர்கள் போராட்டத்தின் போது படைகளை பிரயோகிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் உத்தரவிட்டிருக்க வேண்டும். போலீசாரின் அடக்குமுறை தொடர்பாக அவர் பதவி விலக வேண்டும். நாட்டின் புதிய கல்வி அமைச்சர் பாலியல் குற்றவாளிகளைப் பாராட்டுகிறார் என்றால், தர்மேந்திர பிரதானை நீக்கிய பிறகு மற்றொரு விசித்திரமான மனிதர் கொண்டுவரப்பட்டுள்ளார் என்று அர்த்தம். அவர்களது கட்சி குண்டர்களால் நிரம்பியிருப்பதால் அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியாது. ராம் ரஹீம் (பாலியல் குற்றவாளி) போன்றவர்கள் அவர்களது பதவிக்காலத்தில் பரோலில் வெளிவருகிறார்கள். இந்த அரசாங்கம் குண்டர்களையும் பாலியல் குற்றவாளிகளையும் ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
