கரூர்: கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இன்று காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரபட்டியிலுள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல கரூர் தொழில்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இதனால், கரூரில் பரபரப்பு நிலவி வருகிறது.
மண்மங்கலம் அருகே உள்ள அவரது பூர்வீக வீடு, உதவியாளர் சுப்பிரமணி வீடு, திமுக நிர்வாகி பாஸ்கரன் வீடு மற்றும் கோதைநகர் பகுதியில் உள்ள கார்த்தி, ரமேஷ் ஆகியோரின் வீடுகள் உட்பட மொத்தம் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கரூரில் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, தற்போது இவ்வழக்கில் கைதாகி ஜாமீனில் இருக்கும் கார்த்திக் என்பவரது வீடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
