சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தை மேலும் விரைவாகவும் திறம்படவும் செயல்படுத்தும் நோக்கில் தமிழக அரசு ஒரு முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாநிலம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம் சென்னை (வட மண்டலம்) மற்றும் திருச்சி (தென் மண்டலம்) என 2 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு தலா ஒரு கூடுதல் ஆணையர் நியமிக்கப்பட உள்ளனர்.சென்னை மண்டலத்தின் கீழ் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
திருச்சி தென் மண்டலத்தின் கீழ் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. புதிய அரசாணையின்படி, கூடுதல் ஆணையர்களுக்கு கோயில் நிர்வாகம், பதிவேடுகள் பராமரிப்பு, கோயில் சொத்துகள் ஆய்வு, பட்ஜெட்டுக்கு ஒப்புதல், குறிப்பிட்ட அளவிலான கொள்முதல் டெண்டர்களுக்கு அனுமதி, குத்தகை மற்றும் ஏல நடவடிக்கைகள், நிதி மாற்றங்கள், பாலாலயம், அஷ்டபந்தனம், கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல நிர்வாக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
