சென்னை: நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.1,46,987 கோடியாக உள்ளது என வங்கியின் நிர்வாக இயக்குநர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் 2026-27ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டு கணக்கு முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குநரும் முதன்மை செயல் அதிகாரியுமான விஜய் ஆனந்த் நேற்று சென்னையில் வெளியிட்டு, வங்கியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி கூறினார்.
அப்போது விஜய் ஆனந்த் கூறியதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் வங்கியின் மொத்த வியாபாரம் 23 சதவீதம் உயர்ந்து ரூ.1,19,754 கோடியில் இருந்து ரூ.1,46,987 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் வைப்புத் தொகை 21 சதவீதம் உயர்ந்து ரூ.65,734 கோடியில் இருந்து ரூ.79,342 கோடியாகவும் மற்றும் கடன்கள் கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் உயர்ந்து ரூ.54,020 கோடியில் இருந்து ரூ.67,645 கோடியாகவும் உள்ளது. முதலாம் காலாண்டில் வங்கியின் மொத்த லாபம் 29 சதவீதம் அதிகரித்து ரூ.581 கோடியாக உள்ளது.
அதேநேரத்தில் வங்கியின் நிகர லாபம் 25 சதவீதம் அதிகரித்து ரூ.383 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், வங்கியின் நிகர வட்டி வருமானம் ரூ.820 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் வராக் கடன் 1.73 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும், வங்கியின் நிகர வராக் கடன் 0.61 சதவீதமாகக் குறைந்துள்ளது; வங்கியின் சொத்தின் மீதான வருவாய் 1.57 சத்வீதமாகவும் உள்ளது.வங்கியின் நிகர மதிப்பு கடந்த ஆண்டில் இருந்த மதிப்பான ரூ.9,686 கோடியில் இருந்து ரூ.10,905 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கி இன்று வரை 1000 கிளைகள் மற்றும் 1821 தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரங்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
