வேலூர்: வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக சத்தியவாணி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் வேலூர் அண்ணா சாலையில் தெற்கு காவல் நிலையம் அருகே போக்குவரத்து சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தார். ஆட்டோவில் இருந்த நபர் போதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. விசாரணையில், அவர் வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே வசிக்கும் விஜயன் என தெரியவந்தது. அவரிடம் போதையில் ஆட்டோ ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்படும் என எஸ்ஐ சத்தியவாணி கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் எஸ்ஐயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தனது மகன்களுக்கு போன் செய்து வரவழைத்து உள்ளார். அங்கு வந்த விஜயனின் மகன் யுவராஜ்(21) தந்தையுடன் சேர்ந்து எஸ்ஐ சத்தியவாணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதில் தடுமாறி விழுந்த எஸ்ஐ சத்தியவாணி லேசான காயமடைந்தார்.இதுகு றித்து வேலூர் வடக்கு போலீசார், பெண் எஸ்ஐயை தாக்கிய விஜயன், அவரது மகன் யுவராஜ் ஆகிய 2 பேர் மீதும் பெண் வன்கொடுமை உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
