×

பேருந்து பற்றாக்குறையால் கூட்ட நெரிசலில் செல்லும் அவலம் ஒரத்தநாடு அரசு கல்லூரியில் 2 ஷிப்டுகள் அமல்படுத்த வேண்டும்

*பெற்றோர், மாணவிகள் வலியுறுத்தல்

ஒரத்தநாடு : ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை காலை மற்றும் மதியம் என இரண்டு வேலையாக நடத்த மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

இங்கு குறைந்தபட்சம் 5,000க்கும் மேற்பட்ட மாணவிகள், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கோயம்புத்தூர், அரியலூர், திருத்துறைப்பூண்டி, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள் பயின்று வருகின்றனர்.

அந்த மாணவிகளுக்கு போதுமான கட்டிட வசதி மற்றும் மாணவிகளுக்கு தங்கும் விடுதி இல்லாத காரணத்தினால் தனியாக வீடு வாடகைக்கு எடுத்தும் தனியார் விடுதிகளில் தங்கி பயின்று வந்தனர். இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் கல்லூரி வளாகத்தில் உள்ளே மாணவிகள் தங்கும் விடுதி கட்டப்பட்டது அதுமட்டுமின்றி அதிகமான மாணவிகள் இருப்பதால் பாப்பாநாடு மற்றும் ஒரத்தநாட்டில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளுக்கு சொந்தமான மாணவிகள் விடுதிகளிலும் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, திருவோணம், கறம்பக்குடி, கந்தர்வகோட்டை தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மாணவிகள் பேருந்தில் சென்று வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கும் மேல் இந்த கல்லூரி காலை மற்றும் மதியம் என இரண்டு வேலைகளாக செயல்பட்டு வந்தது.

ஆனால் தற்போது காலை 9:30 மணிக்கு தொடங்கப்பட்டு பிற்பகல் 3 மணி அளவில் கல்லூரி முடிக்கப்படுவதால் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு மாணவிகள் ஆளாவதாக மாணவிகளின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மதியம் இரண்டு வேலைகளில் கல்லூரியை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கல்லூரியில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் விசாரித்த போது, கல்லூரியில் வகுப்பறைகள் மூன்றாண்டுக்கு முன்னதாக பற்றாக்குறையாக இருந்ததால் தற்பொழுது வகுப்பறைகள் அதிகமாக கட்டப்பட்டு அனைத்து மாணவிகளும் படிப்பதற்கான வசதிகள் உள்ளதால் கல்லூரியை முழு நேரமாக மாற்றி கல்லூரியில் செயல்பட்டு வருகிறது என்று தெரிவிக்கின்றனர்.

மேலும், பேருந்து பற்றாக்குறை சம்பந்தமாக ஒரத்தநாடு போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் மற்றும் ஓட்டுநர்களிடம் கேட்டபோது கல்லூரி முழு நேரமாக செயல்பட்டு வருவதால் பெண்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு பேருந்தில் 70 முதல் 120 மாணவிகள் பயணம் செய்ததால் தான் பேருந்துக்குள் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் விரைந்து விசாரித்து ஒன்று கல்லூரியை இரண்டு வேலையாக மாற்ற வேண்டும் அல்லது அதிகமான பேருந்து இயக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Orathanadu Government College ,Oratanadu ,Government of Oratanadu State College of Women Arts and Sciences ,Thanjavur District ,Oratanadu Government Arts and ,
× RELATED முதல்வர் அலுவலக இடமாற்றத்தால்...