கோபி,ஜூலை21: கோபியில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் 7 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோபி, நஞ்சகவுண்டன்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலருக்கும் சளி, காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இதில் தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது, ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்த போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக பருவ நிலை மாற்றம், மழைப்பொழிவு போன்ற காரணங்களால் ஆங்காங்கே மழைநீர் தேங்குவதாலும், நல்ல தண்ணீரை மூடி பயன்படுத்தாமல் இருப்பதும் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக உள்ளது.
இதுகுறித்த போதிய தடுப்பு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வையும்,இதுவரை சுகாதாரத்துறையினர் செய்யாத நிலையில் அடுத்தடுத்த பலரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் டெங்கு காய்ச்சல் பரவி உள்ள இடங்களில் உடனடியாக முழு அளவில் தடுப்பு நடவடிக்கைகளை செய்வதுடன், மற்ற பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும். அதே போன்று டெங்கு காய்ச்சல் பரவி உள்ள இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.
இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா கூறும் போது, டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். குறிப்பாக டெங்கு கொசு ஒழிக்க புகை மருந்து தெளிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றார். இந்நிலையில் கோபி நஞ்சப்பா வீதியில் 39 வயது ஆண் ஒருவர் எலி காய்ச்சலாலும், காமராஜ் நகரில் 9 வயது சிறுமி மர்மக் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
